ரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு

PMEGP-Prime Minister’s Employment Generation Programme தொழில் தொடங்க நிறைய முதலீடு (Capital) தேவைப்படுகின்றன. தொழில் துவங்கும் எண்ணம் கொண்ட நிறைய பேர் தொழிலுக்குத் தேவையான பண முதலீடு (Investment) தங்களிடம் இல்லாததால் தங்கள் கனவுகளை பாதியிலேயே கைவிடுகின்றனர். தொழில்முனைவோர் தொழில்களை தொடங்குவதற்கான முதலீட்டை (Capital) பெற பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உதவுகிறது. தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான நிதியுதவியை பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் பெறலாம். இத்திட்டமானது Prime Minister’s Rojgar Yojana (PMRY) மற்றும் Rural Employment Generation Programme (REGP) ஆகிய இரண்டையும் இணைத்து, 2008 ஆகஸ்டு ஆண்டு 15ம் தேதியன்று உருவாக்கப்பட்டது.

நோக்கம்

  • நாட்டில் தொழில் நிறுவனங்கள் அதிகம் இருந்தால்தான் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும். தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) முக்கிய நோக்கம்.
  • பாரம்பரிய தொழில்முனைவோர், கிராமப்புற / நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்து, முடிந்த வரை அவர்களது இடத்திலேயே சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தருதல்.
  • பாரம்பரிய தொழில்முனைவோர்களின் வருமானம் ஈட்டும் திறமையை உயர்த்துவதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கச் செய்தல்
  • கிராமப்புற, நகர்ப்புற, பாரம்பரிய தொழில்முனைவோருக்கு தொடர்ந்து, நிரந்தரமாக வேலை வழங்குவதன் மூலம், வேலை இல்லா இளைஞர்கள் நகர்புறங்களுக்கு குடி பெயர்வதைத் தடுத்தல்.

தொழிலின் திட்ட மதிப்பு

  • உற்பத்தி சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ. 25 இலட்சத்திற்குள் இருந்தால் அதற்கான முதலீட்டை பெற PMEGP திட்டதின் மூலம் விண்ணபிக்கலாம்.
  • சேவை சார்ந்த நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு ரூ. 10 இலட்சத்திற்குள் இருந்தால் PMEGP திட்டதில் விண்ணபிக்கலாம்.

அரசு மூலதன மானியம்

  • பொதுப்பிரிவினர் கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25% சதவீதத்தை மானியமாக (Subsidy) அரசு அளிக்கிறது.
  • பொதுப்பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 15% சதவீதத்தை மானியமாக பெறலாம்.
  • சிறப்பு பிரிவினர் (ஆதி திராவிடர் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் இராணுவத்தினர் / உடல் ஊனமுற்றோர்/ பெண்கள்) கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 35% சதவீதத்தை மானியமாக அரசு அளிக்கிறது.
  • சிறப்பு பிரிவினர் (ஆதி திராவிடர் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் இராணுவத்தினர் / உடல் ஊனமுற்றோர்/ பெண்கள்) நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் தொழிலின் திட்ட மதிப்பில் (Project Value) அதிகபட்சம் 25% சதவீதத்தை மானியமாக பெறலாம்.

தொழில் முனைவோர் சொந்த முதலீடு

பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 10% விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத் தொழிலில் செலுத்த வேண்டும்.
சிறப்புப் பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத் தொழிலில் செலுத்த வேண்டும்.

வயது மற்றும் வருமான வரம்பு

18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் PMEGP திட்டத்தில் விண்ணபிக்கலாம். உச்சபட்ச வயது வரம்பு ஏதுமில்லை.
வருமான வரம்பு ஏதும் PMEGP திட்டத்தில் இல்லை. எல்லா வருமான வரப்பினரும் விண்ணபிக்கலாம்.

சிறப்புப் பிரிவினர்

ஆதி திராவிடர் / பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் இராணுவத்தினர் / உடல் ஊனமுற்றோர்/ பெண்கள் போன்றவர்கள் இத்திட்டத்தில் சிறப்பு பிரிவினர் ஆவர்.
விண்ணப்பிக்கவேண்டிய அரசு அலுவலகங்கள்
படித்த வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க PMEGP திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையங்கள், கதர் கிராம தொழில் வாரியம் ஆகியவற்றை அணுகி விண்ணபிக்கலாம். மாவட்ட தொழில் மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளது.

கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள்

  • PMEGP திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORTION) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.
PMEGP திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களும், தொழில்களும்
  • மத்திய அல்லது மாநில அரசின் மானியத்துடன் கூடிய ஏதேனும் ஒரு திட்டத்தில் கடன் பெற்றவர்கள் PMEGP திட்டத்தில் விண்ணபிக்க இயலாது.
  • வியாபாரம் சார்ந்த தொழில்கள் (பல சரக்கு கடை,மளிகை கடை, பொருட்களை வாங்கி,விற்கும் தொழில்) தொடங்க PMEGP திட்டத்தில் விண்ணபிக்க இயலாது.
  • படித்து கொண்டிருப்பவர்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு PMEGP மூலம் முதலீட்டை பெற இயலாது.
  • இறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், போதை பொருட்கள் சார்ந்த தொழில்கள், தோட்டச் செடிகள், மலர்ச் செடிகள், மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு, மது பரிமாறும் உணவு விடுதிகள், 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க PMEGP திட்டத்தில் பயன் பெற இயலாது.

PMEGP திட்டத்தில் விண்ணபிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்

  1. பூர்த்தி செய்யப்பட்ட PMEGP விண்ணப்பம்.
  2. தொழிலின் திட்ட அறிக்கை.
  3. கல்வித் தகுதி சான்றிதழ்.
  4. கல்வித் தகுதி சான்றிதழ் இல்லையெனில் வயது ஆதார சான்றிதழ்.
  5. குடும்ப அட்டை அல்லது மத்திய, மாநில அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு ஆதாரம்.
  6. தொழில் செய்யவிருக்கும் இடத்திற்கான நில பத்திர நகல் / வாடகை ஒப்பந்த பத்திரம் / குத்தகை ஒப்பந்த பத்திரம்.
  7. கட்டிடம் கட்டுவதற்கு கடன் தேவைப்படின் மதிப்பீட்டுடன் கூடிய கட்டிட வரைபடம்.
  8. இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் விலைப்புள்ளி
  9. விண்ணப்பதாரர் சிறப்பு பிரிவினர் (Special Category) என கோரும் பட்சத்தில் சாதிச் சான்றிதழ்.
  10. தொழில் சம்மந்தமான பயிற்சிகள் முடித்திருப்பீன் அதற்கான சான்றிதழ் .

மேலும் விவரங்களுக்கு

மாவட்ட தொழில் மையம் (DIC-DISTRICT INDUSTRIES CENTRES), மற்றும் கதர் கிராம தொழில் வாரியம் (Khadi and Village Industries Commission Boards – KVIBs) ஆகியவற்றை அணுகலாம்.www.kvic.org.in .
ஆதாரம் : தமிழ் தொழில்முனைவர் இணையதளம்

Post a Comment

Previous Post Next Post